புதன், 1 பிப்ரவரி, 2012

தல்பியா கூறுதல்


தல்பியா கூறுதல்
தல்பியாவின் வாசகம் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்திலமைந்த பள்ளிக்கருகில் அவர்களின் வாகனம் எழுந்து நின்றதும், அதன் மேல் அமர்ந்து “அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

பொதுவாக, நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்ததற்கு மேல் நாமாக எதையும் அதிகப்படுத்த அனுமதி இல்லாவிட்டாலும், தல்பியாவின் போது இறைவனைப் புகழும் விதமாக நாமாக சில வாசகங்களை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தல்பியாவுடன் உயர்வுகளுக்கு உரியவன் (தல் மஆரீஜ்) என்ற வார்த்தையையும், இது போன்ற கருத்துடைய வார்த்தைகளையும் மக்கள் சேர்த்துக் கூறலானார்கள். இதனைச்செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் (அவர்களைக் கண்டித்து) எதனையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட தல்பியாவுடன் “லப்பைக் லப்பைக் வஸஃதைக, வல்கைரு பியதைக வர்ருக்பாவு இலைக வல்அமல்” என்பதை அதிகப்படியாகக் கூறுவார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இந்த ஹதீஸ்களிலிருந்து தல்பியாவில் இறைவனின் பெருமையைக் கூறும் வாசகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை அறிய முடிகின்றது.

தல்பியாவை உரத்துக் கூறுதல்
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தல்பியாவை உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாயிப் பின் கல்லாத் (ரலி) நூல்கள் : ஹாகிம், பைஹகீ.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)

நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.
நான் அரஃபாவிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல் : இப்னுகுஸைமா

எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓதவேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.
இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும்வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச் சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும்போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டிவிடுங்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ


தைக்கப்படாத ஆடைகளை கிடைக்கும்போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.
“யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக