ஒருவர் தொழ நாடினால் அவர் ‘அல்லாஹ் அக்பர்’ என்று தக்பீர் கூறவேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாக கூறுகின்ற இந்த தக்பீர், ‘தஹ்ரீமா’ என்று குறிப்பிடப்படுகின்றது. ‘தஹ்ரீமா’ என்றால், தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் விலக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது.
அதுபோல் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறுவதற்குத்தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் மக்கள் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என விளங்கியுள்ளனர். நெஞ்சில் கைகட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக்கூடாது. ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்வதே தக்பீராகும்.
இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். ‘இஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.
ஜுப்பா (குளிராடை) அணிந்து ஒருவர் இஹ்ராம் கட்டிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டார். சற்று நேரம் மௌனமாக இருந்த நபி (ஸல்) அவர்கள், வஹி வந்த பின் ஜுப்பாவைக் கழற்றி விடுமாறு அவருக்குக் கூறினார்கள் (சுருக்கம்)அறிவிப்பவர் : யஃலாபின் உமய்யா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
இஹ்ராமுக்குப் பிரத்தியோகமான ஆடை அணிவது அவசியம் என்றாலும், அவ்வாறு ஆடை அணிவதே இஹ்ராம் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால், “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூறவேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக ஹஜ்ஜன்” என்று கூறவேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக உம்ரதன்” என்று கூறவேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக