புதன், 1 பிப்ரவரி, 2012

இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை


இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
இஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தையல் இல்லாத ஆடை அணிந்து குளித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்கள் : திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, தாரகுத்னி.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தன்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களின் தலையிலும் தாடியிலும் எண்ணெய்யின் மினுமினுப்பை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.
1. இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது. பிறருக்கு திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்கள்; : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா.


2. மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக்கூடாது.
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட சில மாதங்களாகும். யாரேனும் அம்மாதங்களில் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சச்சரவில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.”
அல்குர்ஆன் - 2 : 197

இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் இந்த வசனம் தடை செய்கின்றது.

3. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர்ப்பிராணியையும் கொல்லக்கூடாது; உண்பதற்காக வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது.
“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். ஏனென்றால், மறைவில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு”. அல்குர்ஆன் - 5:94
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதை உங்களில் நேர்மைமிக்க இருவர் முடிவு செய்யவேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்பு நோற்க வேண்டும்.
அல்குர்ஆன் - 5:95

“உங்களுக்கும் இதரபிராணிகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு (இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களும் ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”.
அல்குர்ஆன் - 5:96 

வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது.

இந்த வசனங்களில் வேட்டையாடுவதுதான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டையாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றிதிரியும் மான், முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டையாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடல்வாழ் உயிரினங்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிவிட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்யவேண்டும்.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும். அந்த முடிவுப்படி நடந்து கொள்ள வேண்டும்.

மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும், முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும்.

இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது நோன்பு நோற்க வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் நீங்கள் வேட்டையாடமலிருந்தால் அல்லது உங்களுக்காக வேட்டையாடப்படாமலிருந்தால், நிலத்தில் (மற்றவர்களுக்காக) வேட்டையாடப்பட்டவை ஹலாலாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா
ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள். உங்களுக்காகவே வேட்டையாடினேன் என்று நான் கூறியதால் நபி(ஸல்) அவர்கள் சாப்பிடவில்லை. மற்றவர்கள் சாப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா

இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும், அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரே வேட்டையாடினாலோ, அவருக்காகவே வேட்டையாடப்பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக்கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது.

உயிர்பிராணிகளைக் கொல்லக் கூடாது என்பதில் சில விலக்குப் பெறுகின்றன.
வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம

4. இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் தலையை மறைக்ககூடாது ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்கவேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்றால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது முகத்தையோ தலைமுடியையோ மூடவேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 

மறுமையில் அவர் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியயதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.
நாங்கள் கடைசி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும்வரை அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து கொண்டார்; மற்றொருவர் அவர்கள் மீது வெயில்படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.
அறிவிப்பவர் : உம்முல் ஹுஸைன் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

வெயில்படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

5. இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப்பொருட்களை உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசிக்கொள்ளக்கூடாது.
இஹ்ராம் கட்டியவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகக் கூறப்படும் ஹதீஸின் ஒரு அறிவிப்பில் “அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

6. இஹ்ராம் கட்டியவர் ஹஜ் கிரியைகளை முடிக்கும்வரை மயிர்களை நீக்கக்கூடாது. நகங்களை வெட்டக்கூடாது. தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக்கொண்டால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்துவிட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஃ’ பேரீச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர் : கஃப் பின் உஜ்ரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்
இந்தக் கருத்து புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.
உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்கவும் எண்ணினால் தனது முடியையும் நகங்களையும் வெட்டாமல் தடுத்துக் கொள்ளட்டும் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ

குர்பானி கொடுக்கக் கூடிய மற்றவர்களுக்குரிய இந்த தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியதுதான்.

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
ஹஜ்ஜுக்குச் செல்பவர் இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும் என்று நாம் விளங்கினோம். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.
மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைபா’ என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ‘ஜுஹ்பா’ என்ற இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன்அல்மனாஸில்’ என்ற இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். “இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் 


இந்தியாவிலிருந்து செல்பவர்கள் ‘யலம்லம்’ வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல் போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக